மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று அரச நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி.யின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மின்சாரக் கட்டண நிலுவை காரணமாக மின்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சில சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்படாமலேயே துண்டிக்கப்பட்டதாகக் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு, அதற்கான கொடுப்பனவுகள் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, ஆங்கிலத்தில் அனுப்பப்படும் குறுந்தகவல்களைப் புரிந்துகொள்ள முடியாத முதியவர்களை இலக்காகக் கொண்டு இந்த முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், இதுகுறித்து மின்சார சபை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், நிலுவைக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரும் சேவையை மீளப் பெற பொதுமக்கள் கட்டணப் பற்றுச்சீட்டுடன் நேரில் வருமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். இணைய வழியில் கட்டணத்தை உறுதிப்படுத்தும் வசதி உள்ள நிலையில், மக்களை தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்காமல் தொலைபேசி மூலமே சேவையை மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளே நகரில் டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வீதிகள் மற்றும் வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும், குப்பை அகற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்காமல், பிற செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்கால தேர்தல்களில் போலியான வாக்குறுதிகளை நம்பாமல், மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.







