நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (28) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த கால வரையறையற்ற பணி நிறுத்தத்தை 48 மணித்தியாலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை வைத்தியசாலையில், தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும் குறித்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரின் செயற்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணையை நடத்தத் தவறியமையினாலும் இப் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பிரதி பணிப்பாளர் குறித்த முடிவு அடுத்த 48 மணித்தியாலத்தில் தெரிவிக்கப்படும் என்றும் சுகாதார பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சுகாதார பிரதி அமைச்சர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதி அமைச்சர், அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
பணி நிறுத்தத்தால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டே அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இந்த பணிநிறுத்தத்தை 30ஆம் திகதி காலை 8.00 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.








