படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று (27) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தின்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைக்கொடு, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எங்கே, ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நாட்டின் உள்ளக பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கையிழந்துள்ளதன் காரணமாக சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.











