காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக, மக்களாக 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த சாட்சியங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நாட்டின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது. இந்த நிலையில் அன்றைய தினம் அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்த்து எமது எதிர்ப்பினை தெரிவிக்கமுன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நேற்றைய தினம் இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் என்பன இணைந்து இந்த கூட்டத்தினை நடாத்தியது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்வரும் 04ஆம் திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பிலும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டஉறவுகள் சங்கத்தினர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி,
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நான்காம் திகதி அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுவது சுதந்திர நாள் என்று ஆனால் அது தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு கரிநாள். எத்தனையோ ஆட்சிகள் மாறி வந்தாலும் ஆனால் தமிழர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தங்களது உறவுகளை தொலைத்து விட்டு ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வந்து செல்வார்களே தவிர தாய்மாருக்கான எந்த ஒரு நீதியும் இதுவரை கிடைக்கவில்லை.

16 வருடங்களாக எனது கணவரை கூட நான் தேடிக் கொண்டு இருக்கின்றேன் 16 வருடங்களாக ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதனை செய்வோம் இதனை செய்வோம் என்று கூறுகின்றார்கள் ஆனால் உண்மையில் இந்த காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனைக்கு இந்த புதிய அரசு கூட எந்த ஒரு விதத்திலும் கவனம் செலுத்தவில்லை. தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து இந்த ஆட்சிக்கு வந்திருந்தார். சுமுகமான ஒரு அரசியலாக பார்க்கின்றாரே தவிர மற்றபடி எங்களுக்கான பிரச்சனைகளுக்கான எந்த ஒரு தீர்வு திட்டங்களும் இதுவரை இடம்பெறவில்லை.
அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக மக்களாக 350 க்கும் மேற்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த சாட்சியங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
அதேபோன்று தமிழர்களது அனைத்து உரிமைகளும் முடக்கப்படுகின்றது. புதிய சட்டங்களை கொண்டு வந்து எங்களது குரலை நசுக்கிக்கின்றார்கள். தனது மண்ணில் தான் ஆளக்கூடிய நிலைமை இல்லாத ஒரு சூழ்நிலையை ஒவ்வொரு சிங்கள அரசியல் சட்டங்களில் கூடாகவும் எங்களை ஒரு அடக்குமுறைக்குள் கொண்டு வருகின்றார்கள்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று அழைப்புகளை விடுத்து வருகின்றார்கள.; அதே நேரத்தில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அனைத்து பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் உரத்த ஒரு குரல் கொடுத்து நான்காம் திகதி இந்த போராட்டத்திற்கு பெரிய ஒரு செய்தியை இதுவரை இந்த அரசு ஒன்றரை வருடங்கள் கடந்து எங்களுக்கான நில பிரச்சினைகளாக இருக்கட்டும் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினையாக இருக்கட்டும் தொல்பொருள் என்கின்ற போர்வையில் பதாகைகளை இட்டு அரசகாணிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய நிலத்தில் நாங்கள் வாழ்வதற்கான உரிமை இல்லை எமது நிலத்தை தா என்று கேட்டாலும் அதற்கும் பொலிசாரை குவித்து எங்களை அடக்கி ஒடுக்குகிறார்களே தவிர இவ்வாறான நாட்டில் எமக்கு எங்கு சுதந்திரம். இந்த சுதந்திரம் இல்லாததால் தான் நாங்கள் கரி நாளாக எதிர்வரும் நான்காம் திகதி நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.
அனைத்து பொதுமக்களும் சிவில் அமைப்புகள் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இளைஞர் யுவதிகள் இதில் உண்மையில் இளைஞர் யுவதிகள் உங்களது பங்களிப்பு இதில் அதிக அளவில் இருக்க வேண்டும். அதேபோன்று தேசியம் சார்ந்த அரசியல் தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவரும் இதில் உரத்த தொணியில் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
போக்குவரத்து சபை, வர்த்தக சங்கம், ஆட்டோ சங்கம், மீனவர் சங்கங்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி, பெருமளவான செய்தி ஒன்றினை இலங்கை அரசுக்கும் அல்லது சர்வதேசத்திற்கும், தமிழர்கள் காலாகாலமாக ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள், நீதி இன்றி வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள், பிள்ளைகளை தொலைத்து விட்டு நீதி இல்லாமல் வயது முதிர்ந்த நிலையிலும் அவலத்தோடும் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் ஒவ்வொரு தாய்மாரும் மரணித்து கொண்டிருக்கின்றார்கள். இதே நிலை தொடராமல் எங்களுக்கு நீதி பெற்று தருவதற்கு அனைவரும் சேர்ந்து எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்.என்றார்.








