மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, சில தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று இரவு வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கீழ் வளிமண்டல தளம்பல் நிலையின் தாக்கத்தினால் நாளை (30.01.2026) காலை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், நாளை முற்பகல் அளவில் இந்த மழை நிலைமை ஊவா மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மறுதினம் (31.01.2026) கிழக்கு மாகாணம் முழுவதும் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதுடன், இதே நாளில் இந்த மழை வடக்கு மாகாணத்திற்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும், வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் குறைந்த மழை அல்லது மழையற்ற நிலை காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 31ஆம் திகதி மத்திய, மேல், வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், இம்மாகாணங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 01.02.2026 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் நெல் அறுவடை மற்றும் நெல் உலர்த்தும் நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.








