2025ஆம் ஆண்டிற்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இலங்கையின் வாடகைச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பாரிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
குடியிருப்பாளர்களைத் துன்புறுத்துவதைத் தடுப்பதும், சட்டவிரோத வெளியேற்றங்களைத் தவிர்ப்பதும் ஒரு பொது நோக்கமாகும் என்பதை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி, எனினும் இந்த வரைவுச் சட்டம் வாடகைச் சந்தையையும் நீண்டகால அடிப்படையில் வாடகைக்கு இருப்பவர்களையுமே பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஏற்கனவே 1972ஆம் ஆண்டின் வாடகைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களிலிருந்து விலகி, 2023ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சமநிலையான ஒரு கட்டமைப்பை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடகைதாரர் ஒருவர் மாதாந்த வாடகை, நீர், மின்சாரக் கட்டணங்கள் அல்லது தொடர்மாடி (Condominium) நற்பணி கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க நில உரிமையாளர் கடமைப்பட்டுள்ளார்.
இது உரிமையாளரை வைத்து வாடகைதாரரை பலவந்தமாகப் பராமரிக்கச் செய்வதற்குச் சமமாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
கட்டணம் செலுத்தாதவர்களுக்குத் தடையற்ற சட்டப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்தை தவறாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இச்சட்டம் காரணமாக நில உரிமையாளர்கள் தமது சொத்துக்களை வாடகைக்கு விட அச்சப்படுவார்கள். இதனால் வீடுகளுக்கான விநியோகம் குறைந்து, வாடகை விலைகள் அதிகரித்து, இறுதியில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கே பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டத்தின் மூலம் எட்டப்பட்ட முன்னேற்றத்தை இந்த புதிய சட்டமூலம் பின்னோக்கித் தள்ளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, 2023ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
அதில், “No payment, no protection” (கட்டணம் செலுத்தாதவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை) என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டம் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, வாடகைதாரர் ஒருவர் தனது வாடகை மற்றும் இதர கட்டணங்களைச் சரியாகச் செலுத்தினால் மட்டுமே அவருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.
சீர்திருத்தம் என்ற பெயரில் நாடு மீண்டும் காலாவதியான சட்டங்களை நோக்கிச் செல்லக்கூடாது என அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.








