இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக வழங்கப்படும் “அவுஸ்திரேலிய விருதுகள் (Australia Awards)” புலமைப்பரிசில் திட்டத்திற்கு 2027 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் இப்புலமைப்பரிசில் திட்டமானது, இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளை வலுப்படுத்துவதையும், வளர்ந்து வரும் தலைவர்களுக்கு சர்வதேச கல்வி மற்றும் தொழில்முறைத் திறன்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் காலநிலை மாற்றம், பேரிடர் அபாயக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நல்லாட்சி, பாலின சமத்துவம், மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் இலங்கை பிரஜைகளாக இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட பாடநெறி தொடர்பான துறையில் குறைந்தபட்சம் மூன்று வருட கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஆங்கில மொழித் தகைமை மற்றும் ஆஸ்திரேலிய இளங்கலை பட்டத்திற்கு நிகரான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன.
அத்தோடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை உள்ளிட்ட 15 பின்தங்கிய மாவட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம், இருவழி விமானப் பயணச் சீட்டு, வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு, தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விண்ணப்பங்கள் 2026 பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








