பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலே பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக சாளம்பைக்குளம், பெரியமடு, அல்லது மடு ஆகியவை 2009க்கு பின்னரே காடுகளாக வர்த்தமானியில்அறிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த காடானது பல தசாப்தங்களுக்கு முன்னர் காடாக வர்த்தமானியில் அறிவிககப்பட்டதாகும்.
இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5,000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர். பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவும், வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றம் செய்வதானது, மிகப்பெரிய சதியாகும்.
குறித்த சதிக்காகவே 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகளை அழித்து செய்கின்ற கிவுல் ஓயா திட்டமானது ஒரு பிழையான திட்டமாகும்.
சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என சிந்திப்பவர்கள் இதற்கு எதிராகவே வழக்கு போட வேண்டுமே தவிர 100 வருடம் பழமையான மன்னார் – புத்தளம் வீதியை மூடுவதற்கு வழக்கு போட்டு வெற்றியடைந்து, அதன் ஊடாக அதனை நியாயப்படுத்தி பேசுவது என்பது நியாயமானதன்று.
கிவுல் ஓயா திட்டம்தான் உண்மையான சுற்றுச்சூழலிற்கு பாதிப்பாகும், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே அல்லது வன்னி மாவட்டத்திலே இவ்வாறு செய்வதானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழ் தரப்பு எங்களை அழைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்திலே எங்கள் கட்சியும் பூரண ஆதரவை கட்டாயம் வழங்கும்.” என்றார்.








