எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின்னர், மீனவர்களையும் படகுகளையும் யாழ் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.








