பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக இன்று 12.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில் மாவட்ட அரசாங்காதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவையாக இருந்ததாகும்.
அவரின் சேவைகள் தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட அரசாங்காதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தையும் வெளியிட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து அமைதியான முறையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மாவட்ட அரசாங்காதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த பொதுமக்கள் குறித்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.








