சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கோரச் சம்பவம், இலங்கையில் சாதாரண குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பு குறித்த பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனினதும், குறிப்பாக தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாகும். எந்தவொரு தொழில் வல்லுநரும் எவ்விதமான அச்சுறுத்தல்களோ அல்லது அழுத்தங்களோ இன்றி, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது சேவையை வழங்கக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளனர்.
சட்டத்தரணிகள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் மாத்திரமன்றி, இந்நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள்ளும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களும் தமது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் நிமித்தமான சூழலில் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வலுவான மற்றும் நம்பகமான வேலைத்திட்டம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.








