‘‘பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர்.
சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இன் கீழ் 2 இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலைக்குரியது.
நாட்டின் பிரஜைகளின் உயிர்களை நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு.இதேநேரம் பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர்.
சாதாரணப் பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது.அக்குரேகொட பகுதி அதி பாதுகாப்பு வலயம் இல்லை. சட்டத்தரணிகளுக்கு தமது சேவை பெறுநர்களுக்காக முன்னிலையாகும் உரிமை உண்டு.
அது அவர்களின் தொழில் கடமை. அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பாதாளக் குழுக்களின் பெயர் குறிப்பிட்டு பொலிஸார் எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை.உயிரிழந்த சட்டத்தரணியிடம் பொலிஸார் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு 12 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அனைத்து விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு விடயங்கள் அறிக்கையிடப்படும். பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.








