மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனம் கோரி மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்றிலிருந்து (23) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். அதன் காரணமாக பிரதமர் அலுவலகத்துக்கு அருகாமையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மேல் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்தபோதிலும் கடந்த இரண்டு வருடங்களாக தமக்குரிய நியமனங்கள் வழங்காமல் அதற்கான செயற்பாடுகளை இழுத்தடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமக்குரிய வெற்றிடங்களை மறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக அந்த இடங்களை நிரப்ப அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைத்த பதாதைகளையும் ஏந்தி அவர்களின் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக, தமக்குரிய சட்டரீதியான உரிமைகளை மறுப்பதற்காக அதிகாரிகள் திட்டமிட்ட முறையில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றனரா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
‘எங்களுக்கு கௌரவமான அரச சேவை வேண்டும், அரசியல் பழிவாங்கல்கள் வேண்டாம் எனக்கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள், தகுதியுள்ள பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்கத் தயங்குவது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், தென் மாகாணத்திலுள்ள 704 ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியதோடு, தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
இந்தப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி உடன டியாகத் தலையிட்டு தமக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் வெற்றிடங்களுக்குரிய நியமனங்களை உடனடியாக வழங்க மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர். தமக்குரிய தீர்வு கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த பட்டதாரிகள், தகுதியுள்ள தமக்கு நியமனம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதையும் நினைவுபடுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இப்போராட்டக்காரர்களில் சில முக்கியஸ்தர்களை பிரதமர் அலுவலக உயரதிகாரிகளோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








