சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும், மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் இலங்கை தமிழரசு கட்சி கூட்டணியாக சேரும் வாய்ப்பு இல்லை என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும், இதுகுறித்த இறுதி முடிவு கட்சியின் உயர்மட்டத்திலேயே எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் சமூகத்தின் முன்னேற்றம் கல்வி மற்றும் அரசியல் வழியே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.








