மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர்கள் தலைமையில் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 23, 49 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசமிருந்து 40 மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டபோது மற்றுமொரு சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இதற்கமைய மற்றொரு சந்தேக நபரான மீன் வியாபாரி கைதானார். கைதான இவ்விருவரும் வியாபாரி, உதவியாளர் என மீன் விற்பனையுடன் செயற்பட்டு வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








