ஹட்டன் – மல்லிகைப் பூ சந்தி பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததையடுத்து, இன்று (23) காலை அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுப் பயணிகள் அதிகளவில் பயணிக்கும் காலை நேரத்தில், சுமார் 6.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறிந்து விழுந்த மரத்தினால் வீதியின் இருபுறங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், பல பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதேசவாசிகள், தோட்டத் தொழிலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) பணியாளர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற முயற்சிகளின் பின்னர், வீதியில் காணப்பட்ட தடை அகற்றப்பட்டு, போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது.








