கண்டி – தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர், ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளது.
இதன்போது, நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்த கற்பாறையில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, இரு மாணவர்களும் தவறி கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவன் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








