மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது.
இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது.
அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஈரானின் அணு மிரட்டலை முழுமையாக அழிக்கும் வரை எண்ணெய் விலை குறுகிய காலம் உயர்ந்தாலும் அது மிகச் சிறிய விலை தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூகவலைத்தளமாக ட்ரூத் சோசியலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அவர் “”ஈரான் அணுசக்தி அச்சுறுத்தல் அழிந்து போகும்போது, குறுகிய கால எண்ணெய் விலை அதிகரிப்பு விரைவாகக் குறையும். அமெரிக்கா மற்றும் உலக பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு இது மிகச் சிறிய விலை. முட்டாள்கள் மட்டுமே வேறுவிதமாக நினைப்பார்கள்! – ஜனாதிபதி DJT”” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.








