மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (10) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.





















இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கணக்காளர் திருமதி பி.சுகீஸ்வரன்,வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன், உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கோடி, பாடசாலை கொடி, இல்லக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை, பண்ட் வாத்திய கண்காட்சி என்பன நடைபெற்றதுடன் மாணவர்களின் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றன.
இதன்போது இல்ல மாணவர்கள் கலந்துகொண்ட உடல்திறனாய்வு கண்காட்சி நிகழ்வும் நடைபெற்றதுடன் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
விடேசமாக மாணவர்களின் சமூக சிந்தனைகொண்ட விநோத உடைப்போட்டியானது அனைவரது கவனத்தினையும் வெகுவாக ஈர்க்கும் வகையிலிருந்தது.
நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் இந்த ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இளங்கோ இல்லம் 579 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினைப்பெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
பாரதி இல்லம் 515 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும், கம்பர் இல்லம் 480 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது வெற்றிபெற்ற இல்லங்களுக்கான வெற்றிக்கேடயங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவளித்துவருகின்றோம்.
புதிய கல்வி சீரமைப்பினை ஆரம்பித்திருக்கின்றோம். தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம். இருந்தபோதிலும் தரம் ஆறின் பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த காலத்தில் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே அதிகளவான நிதிகளை அக்காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் ஒதுக்கிவந்தார்கள். ஆனால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாகாணசபைகள் ஊடாக 350மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கம் ஊடாக 179 மில்லியன் ரூபாக்களும் மொத்தமாக 529மில்லியன் ரூபாவினை நாங்கள் கல்விக்காக ஒதுக்கீடுசெய்திருக்கின்றோம்.
கட்டிடங்களை திருத்துவதற்காகவும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்காகவும் இந்த நிதியை ஒதுக்கீடுசெய்திருக்கின்றோம். இன்னும் பல வேலைத்திட்டங்களை கல்வி அபிவிருத்திக்காக செயற்படுத்தவுள்ளோம்.
கல்வி என்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு சுமையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இம்முறையிலே மாற்றத்தினை கொண்டுவரவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றோம்.

பிரதமர் ஒருபெண்ணாக இருந்து இந்த முயற்சியை முன்னெடுத்துவருகின்றார். இந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் பெண்களுக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தியில் பெண்கள் ஒரு பங்காளராக உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பெண்களுக்கான சந்தர்ப்பத்தினையும் வாய்ப்புகளையும் வழங்கி பெண்களை வலுவூட்டுவதற்கான பல விடயங்களையும் முன்னெடுத்துவருகின்றோம்.
பெண்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாகவும் கல்விக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது என்றார்.








