பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
ஹந்தானை பிராந்தியத்தில் அமைந்துள்ள கால்நடை போதனா பண்ணை மற்றும் பணியாளர் மேம்பாட்டு மையம் ஆகியவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் இந்தச் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கால்நடை மருத்துவ பீடத்தின் பண்ணை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைத் தலைவர் தம்மிக்க பெரேரா, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவியுடன் இப்பகுதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதன்படி, குட்டியுடன் கூடிய ஒரு பெண் சிறுத்தை உட்பட சுமார் எட்டு சிறுத்தைகள் இந்தப் பகுதியில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக குட்டிகளுடன் இருக்கும் பெண் சிறுத்தைகள் உணவைத் தேடி மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் நகர்வதே பல்கலைக்கழக வளாகத்தில் இவை தென்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக பண்ணையிலுள்ள விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிறுத்தைகள் பண்ணையை நெருங்கும் போது ஊழியர்களை எச்சரிக்கக் கூடிய வகையில், அசைவுகளை உணரும் சென்சார்கள் மற்றும் அபாய ஒலி எழுப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உடபேராதனை பகுதியில் அண்மையில் பசு ஒன்றும் நாய் ஒன்றும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட போதிலும், தற்போது நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக சமூகம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்குமாறும், சிறுத்தைகள் நடமாட்டம் குறித்துத் தெரிந்தால் உடனடியாக பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








