போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், எனவே அவை சமூக மயப்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைச்சின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது.
அதற்கமைய மாதிரிக்காக மாத்திரம் சிறிய தொகையை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கை குறித்து அந்த குழு அவதானம் செலுத்தி வருகின்றது. அதேபோன்று ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்து வழக்கு தொடர முடியுமா என்ற பிரச்சினையும் காணப்பட்டது. எனவே தான் அது குறித்த சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்தும் வழக்கு தொடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.








