இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான வீதியில் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கு பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்துள்ளார்.
நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன மீட்டர்) தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் வளம் ஒன்று கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென இந்திரஜித் கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இவ்வாறான மிகப்பெரிய நீர் வளம் மடு பகுதியில் கண்டறியப்பட்டதுடன், அங்கிருந்து நிமிடத்திற்கு 7,000 லீற்றர் நீர்வரத்து பதிவாகியிருந்தது.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அடுக்கமைப்புகளின் பிளவுகளுக்கு ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் அடையாளம் கண்டு, இந்த ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்காலத்தில் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.








