அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதோடு, எண்ணெய் கப்பல் போக்குவரத்து இடம்பெறும் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது.
இதனால் மசகு எண்ணெய், எரிவாயு விநியோகம் உள்ளிட்டவற்றில் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை தடுக்கக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேலும் குறித்த நீரிணை வழியான கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிப்பதோடு, பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை மேற்கொள்ள எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
“ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் மூடவில்லை. அது திறந்தே இருக்கிறது. எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் அவரது நட்பு நாடுகளுக்கு மட்டுமே இப் பாதை மூடப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.
பாதுகாப்பின் காரணமாக பல கப்பல்கள் இப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்கும் எங்களுக்கும் எதுவித சம்மந்ததும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.








