மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலவரத்தால் தற்போது சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை 1 கிலோகிராமுக்கு 2 முதல் 3 ரூபா வரை அதிகரித்துள்ளது. போர்ச் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வருவதற்கு மேலதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மொத்த விலையில் கிலோவுக்கு சுமார் 10 ரூபா குறைந்துள்ளது.

தற்போதைய சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைக்க முயற்சிக்கக் கூடாது. இந்த சூழலையும் சமாளிக்க முடியும்.
அத்துடன் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை. இலங்கைக்கு தேவையான நெத்தலி கருவாட்டில் சுமார் 60 சதவீதம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த சந்தை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் அவற்றை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியும். மேலும், தற்போது ரின் மீன் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியில், போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால், மீண்டும் ரின் மீன் இறக்குமதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படாவிட்டால், பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றார்.








