மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் மற்றும் வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர்.
வவுணதீவு பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்களும், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சுற்றிவளைப்பின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கோடா உள்ளிட்ட மூலப்பொருட்கள், உற்பத்தி உபகரணங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் வவுணதீவு பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











