யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் 19 வயதுடைய மகளும், 21 வயதுடைய மருமகனும் நகர்த்தல் பத்திரம் மூலம் யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். பிரணவன் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையில், விரிவுரையாளர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப ஆதாரங்களான ஏ.டி.எம் பரிவர்த்தனைகள், எரிபொருள் நிரப்பு நிலைய ‘QR’ தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம் இந்தவழக்கில் சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சுமந்திரன் ஆஜரானதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வந்த நிலையில் சுமந்திரன் கீழ் கண்டவாறு முகப்புத்தகத்தில் ஒருபதிவைவிட்டுள்ளார்.
”தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்!
பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரிற்காகவே திரு சுமந்திரன் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையானார்.
மேலும், தவறான செய்திகளைப் பரப்புவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.”








