பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளதால், இன்று (23) காலை பிரதான பேருந்து நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையைத் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, டீசல் விலை அதிகரித்துள்ளதால், பேருந்து கட்டணத் திருத்தம் அவசியம் எனப் பேருந்து சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தன.
நேற்றைய (22) தினமே பேருந்து கட்டணத் திருத்தத்தை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், அது நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்றைய தினம் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டண சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கோரி இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.








