Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

3 months ago
in செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் இளமை காதல், போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை – தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார்.

சடலத்தை வீசிவிட்டு, விரிவுரையாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில், திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டுக்கு பால் காய்ச்சி, குடிபுகுந்து, தம்பதியாக வாழ ஆரம்பித்த மகளும், மருமகனும் 20ஆம் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 21ஆம் திகதி தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள்ளிருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம்- அராலியை பூர்வீக இடமாக கொண்ட விரிவுரையாளர் தயாளினி, கைதடியில் குடியிருந்து, சில வருடங்களின் முன்னர் சுண்டிக்குளி, பாண்டியன்தாழ்வு பகுதியில் காணி வாங்கி, வீடு கட்டி குடியிருந்துள்ளார்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். மகளுக்கு 19 வயது.

அவருக்கும், நாயன்மார்க்கட்டு, இராஜேஸ்வரி வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது.

இந்த இளைஞன் போதைக்கு அடிமையானவர். இந்த பதிவு திருமணம், கடந்த வருடம் நடந்தது. அப்போது விரிவுரையாளரின் மகளுக்கு 18 வயது.

இந்த ஜோடி காதல் வசப்பட்டிருந்த சமயத்தில், போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பாக 2,3 தடவைகள் அந்த இளைஞன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதை இளைஞனுடன் மகளை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என தாயார் உறுதியாக கூறிவிட்டதையடுத்து, மகள் வீட்டுக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிச்சென்று, பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இதனால் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. கணவனால் துன்புறுத்தப்பட்டு, அவரை விட்டுவிட்டு தாயாரின் வீட்டுக்கு மகள் அடிக்கடி வந்துள்ளார்.

மருமகன் குறிப்பிடும்படியாக எந்த வேலையும் செய்யாமல், போதைக்கு அடிமையாக, மகளையும் துன்புறுத்தி வந்த நிலைமையில், மகள் தரப்பில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. விவாகரத்து வழக்கு நடந்து வந்தாலும், அண்மைக்காலமாக, சமூக வலைதளம் மூலம் விரிவுரையாளரின் மகளுடன் தான் தகவல் பரிமாறி வருவதாக கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தது தாயாரின் அறிவுரையின் பேரிலேயே என்றும், மகளுக்கு தன் மீதான கோபம் தீர்ந்து விட்டது என்பதையும் உரையாடலில் அறிந்து கொண்டதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

விவகாரத்து கோரிய மனைவியுடனான உரையாடலில், இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக இளைஞன் கூறுகிறார்.

விவகாரத்து வழக்கின் கடந்த தவணையில், இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அடுத்த தவணை விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கிடையில் மனைவியை சமரசப்படுத்தி, விவாகரத்து வழக்கை, இல்லாமலாக்க இளைஞன் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி இரவு விரிவுரையாளரின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த இளைஞன், வீட்டு கூரை பிரித்து இறங்கி, சீற்றுக்குள் ஒளிந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழையவுள்ள விவகாரத்தை அவர் காதலியிடம் சொல்லவில்லை.

நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் இறங்கி, விரிவுரையாளரின் மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். மகளை தட்டியெழுப்பி, தாம் சேர்ந்து வாழலாம் என கேட்டுள்ளார்.

அதற்கு சேர்ந்து வாழலாம் என அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் தாயாரை கொலை செய்தாலே வாழ முடியுமென்றும் கூறியதாக இளைஞன் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

அந்த பெண்ணின் யோசனையின்படியே, விரிவுரையாளரை கொல்ல முடிவெடுத்ததாகவும் கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.

18ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் விரிவுரையாளர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்ததாகவும், தனது தாயாரின் கால்களை மகள் அழுத்திப் பிடித்திருக்க, இளைஞன் கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையின் பின்னர், வீட்டிலிருந்த சிசிரிவி கமராவின் டிவிஆர் இருந்த அறையை திறந்து, டிவிஆரை எடுத்து சென்றுள்ளனர்.

அதை திருகோணமலை செல்லும் வழியில் நீர்நிலையொன்றில் எறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

டிவிஆர் இருந்த அறையை திறப்பை மகளே எடுத்து தந்ததாகவும், தாயாரின் நகைகள் இருந்த அறை திறப்பையும் தந்து, நகைகளை எடுக்கும்படி சொன்னதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த பின்னர், சடலத்தை படுக்கை விரிப்பினால் சுற்றி, விரிவுரையாளரின் காருக்குள் வைத்துள்ளனர். இருவரும் இணைந்தே சடலத்தை காருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் விரிவுரையாளரின் மகளையும் ஏற்றிக்கொண்டு, தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாடகை வாகனத்தில், அந்த பெண்ணுடன், விரிவுரையாளரின் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

விரிவுரையாளரின் சடலத்தை புதைப்பதற்காக மண்வெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு, காரில் புறப்பட்டுள்ளனர். மண்வெட்டியினால் கிடங்கு வெட்ட முனைந்த போது, மண்வெட்டி உடைந்ததால், அந்த முயற்சியை கைவிட்டு, தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றதாக இளைஞன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், கொலையில் தனது பங்கை மகள் இதுவரை மறுத்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விரிவுரையாளரான தனது தாயாரையும், தங்கையையும் கடத்திச் சென்றுவிட்டதாக விரிவுரையாளரின் மகன் காவல்துறையில் முறையிட்டிருந்தார்.

காவல்துறையினர் இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, சில தொழில்நுட்ப வசதிகளால் – தம்பதிகள் சிக்கியுள்ளனர்.

அவர்கள் சிக்குவதற்கான தொழில்நுட்ப தகவல்களை விரிவுரையாளரின் மகனே கொடுத்துதவியுள்ளார். இந்த ஜோடி தப்பிச்செல்லும் போது, விரிவுரையாளரின் ATM அட்டையை பயன்படுத்தி, கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் பணம் பெற்றுள்ளனர்.

இதற்கான குறுந்தகவல் விரிவுரையாளரின் தொலைபேசிக்கு சென்றது. அத்துடன், திருகோணமலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கியூ.ஆர் குறியீட்டுக்கு எரிபொருளை பெற்றுள்ளனர்.

இதற்கான குறுந்தகவலும் தொலைபேசிக்கு சென்றது. இது தவிர, கொலையின் பின்னர் தனது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்த மகள், திருகோமணலையில் வீடொன்றை வாடகைக்கு பெற்று, குடிபுகுந்த பின்னர், தனது தொலைபேசியை இயக்கியுள்ளார்.

இதன்போது, அவரது புவியியல் இருப்பிடத்தை சகோதரன் அறிந்து கொண்டார். இந்த தகவல்களின் அடிப்படையின் காவல்துறையினர் துரிதமாக செயற்பட்டு, திருகோணமலையில் வைத்து இந்த ஜோடியை கைதுசெய்துள்ளனர்.

விரிவுரையாளரை கொன்ற பின்னர், அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்திலேயே, திருகோணமலையில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து இந்த ஜோடி யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, சடலமாக வீசப்பட்டது தெரிய வந்தது.

இளைஞனின் தகவலின் அடிப்படையில் தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.