தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணங்களில் மீண்டுமொரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ் பேருந்து கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
“மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கலாம். அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப உரிய நேரத்தில் முறையான முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் பட்சத்தில், அதன் பலனைப் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அவ்வாறான சூழலில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்களைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.








