கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (24) உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 17 ஆம் திகதி, அவரது கணவன் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கடுமையாகக் காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கணவன் ஜனவரி 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் சுமார் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்த அவர் வீடு திரும்பியிருந்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று காலை வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








