டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், LankaQR மூலமான ரூ. 5,000 இற்கும் குறைவான பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இது பொருந்தும்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் தேசிய QR கொடுப்பனவு முறையை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இலங்கையில் அன்றாட சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிகளவில் ரொக்கப் பணம் பயன்படுத்தப்படுவது டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 20 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களும், சுமார் 30 மொபைல் செயலிகளும் LankaQR உட்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயன்பாடு இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.

புள்ளிவிபரங்களின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் LankaQR ஊடாக சுமார் 274,000 பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ 1.18 பில்லியனாகும். சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ. 390 மில்லியன் பெறுமதியான 90,000 பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
இந்தத் தரவுகளை ஆய்வு செய்ததில், QR குறியீடு ஊடாக மேற்கொள்ளப்படும் ஒரு சாதாரண பணப் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ. 5,000 இற்கும் குறைவாகவே இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, ரூ. 5,000 இற்கும் குறைவான பணப் பரிமாற்றங்களுக்கு பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவரிடமிருந்தும் எவ்வித மேலதிக கட்டணங்களையும் அறவிடாமல் QR அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.








