சிகிரியா சரணாலயத்தில் வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தமை மற்றும் பாரிய சுற்றாடல் மாசடைவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உதவி முகாமையாளர், பொறியியலாளர் மற்றும் பூங்கா காப்பாளர் (Garden Controller) ஆகிய மூவர் நேற்று (25) சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிகிரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் வேட்டையின் போதே இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஹோட்டல் நிறுவனத்தின் மற்றுமொரு உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின் போது, குறித்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து அகற்றப்படும் கண்ணாடித் துண்டுகள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகள் சரணாலயத்திற்குள் வீசப்பட்டுள்ளமையும், அவற்றை யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவாக உட்கொண்டுள்ளமையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹோட்டலின் மலக்குழிகளில் உள்ள கழிவுகள் கறுப்பு நிறப் பைகளில் நிரப்பப்பட்டு காடுகளுக்குள் வீசப்பட்டிருப்பதோடு, அந்த மலக் கழிவு நீர் ஹோட்டலின் வடிகால் தொகுதி ஊடாக சீகிரியா குன்றுக்கு அருகிலுள்ள குளத்தில் நேரடியாகக் கலந்துள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான கழிவுகளை உண்பதற்காக வரும் காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகளைப் பிடிப்பதற்காக இரும்பு வலைகள் மற்றும் எஃகு கம்பிகளால் ஆன சுருக்குகள் (Traps) வைக்கப்பட்டிருந்தமையும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றாடல் அழிவு குறித்துக் கருத்துத் தெரிவித்த சிகிரியா வனவிலங்கு அலுவலகத்தின் பிரதானி எஸ்.எஸ். மலிந்த, உலகப் பாரம்பரியச் சின்னமான சிகிரியாப் பகுதியில் இழைக்கப்பட்டுள்ள இந்த பாரதூரமான குற்றத்திற்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். இயற்கை வளங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகச் சட்டத்தை உச்சக்கட்டமாக அமுல்படுத்தித் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.








