இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமை தொடர்பில் வெளியான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.
அதன் பிரதியை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பியிருந்தது.
அதன் பிரகாரம் இம்முறைப்பாட்டுக்காக தமது விளக்க அறிக்கையை இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இன்று சமர்ப்பித்துள்ளனர்.
இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தமது அறிக்கையில்,
தாம் உணவுஇடைவேளைக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சமபவம் நடைபெற்றது என்றும், தமது அலுவலகத்துக்கு நிரந்தர சாரதி இல்லாமையால் தமது நோயாளர் காவு வண்டியினை தற்காலிகமாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவிக்கப்ட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் தமது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும் நியமனம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில்,
இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்திசாலையில் தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 28.03.2026 ஆம் திகதி முதல் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தருக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இதுவரை இல்லாத காரணத்தால் முகாமைத்துவ ஆளணி பிரிவுக்கு இது தொடர்பிலான கோரிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








