2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (31) நடைபெற்ற “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி” (Searching for the Mastermind Behind the Easter Attack) எனும் அவரது ஆய்வு நூல் வெளியீட்டு விழாவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒன்றரை வருட கால தீவிர ஆய்வுக்குப் பின்னர் இந்த நூலை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட கம்மன்பில, தாக்குதலின் பின்னணியில் வேறு நபர்கள் இருப்பதாகக் காட்டப்படும் முயற்சிகளைத் தர்க்கரீதியாக மறுத்துள்ளார்.

“இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டது, வெடிபொருட்களைத் திரட்டியது, குண்டுதாரிகளைத் தெரிவு செய்தது மற்றும் தாக்குதலுக்கான இடங்களைத் தீர்மானித்தது என அனைத்தும் சஹ்ரான் ஹாசீமின் தலைமையிலேயே நடந்துள்ளன. இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிதி வசதிகளையும் அவரே கையாண்டுள்ளார்” என அவர் சுட்டிக்காட்டினார்.
சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டாலும், தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் உயிருடன் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்:
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா.
இரண்டாம் நிலைத் தலைவராகக் கருதப்படும் முகமது நௌபர்.
ஆயுதப் படைப்பிரிவு பொறுப்பாளர் மில்கான்.
இவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என்பது உறுதியாகியுள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

2019 மார்ச் 27 அன்று சஹ்ரான் தனது சகாக்களை அழைத்து, கிறிஸ்தவர்களைக் கொல்லப்போவதாகக் கூறி தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகுமாறு கோரியுள்ளார். இதன் அடிப்படையிலேயே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சுமார் 300 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முழு நிதியுதவியையும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முன்னாள் உறுப்பினர் முஹம்மத் இப்ராஹிம் வழங்கியிருந்தார் என்றும் கம்மன்பில தனது நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகளின் தேவைக்காகவே சஹ்ரானால் முன்னெடுக்கப்பட்டது என்றும், தான் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அமெரிக்க நீதிமன்றிலும் சாட்சியங்களாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். விசாரணைகளைத் திசைதிருப்பப் பார்த்தாலும், சஹ்ரானைத் தவிர வேறு எவரும் சூத்திரதாரியாக இருக்க முடியாது என்பதே உண்மை என அவர் மேலும் வலியுறுத்தினார்.
அதேசமயம் முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.








