கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினரான 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் தங்கியுள்ள திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான “கூடு அஞ்சு” என்பவர் இந்தக் கொலையை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) காலை மற்றும் நண்பகல் வேளைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதான ஆண் ஒருவரும், 23 வயதான பெண் ஒருவரும் 25 கிராம் 840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து கடந்த 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இரத்மலானை பகுதியில் அண்மையில் “கூடு அஞ்சு”வின் நெருங்கிய சகா ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.







