கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று (02) வெளியாகிய கா.பொ.த.உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
இதன்கீழ் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கல்லடி உப்போடையினை சேர்ந்த பிலிப் ரைற்றஸ்மேவின், சுகந்தி தம்பதிகளின் புதல்வனாவார்.
இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.
இதேநேரம் இருவருரின் வீடுகளுக்கும் நேற்று மாலைவ விஜயம் செய்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் இருவரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படுமானால் உதவுவதற்கு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.








