மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, அவர்களின் நகைகளை கொள்ளையிட்டு பின்னர் கிணற்றில் தள்ளியதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே வழக்குடன் தொடர்புடையதாக மயக்க மருந்துகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய சகோதரர் மற்றும் ஒரு ஆட்டோ சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு 10ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு நகைக்கடை உரிமையாளர்களும் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில், அவர்களும் மீண்டும் அதே தேதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மயக்க மருந்து வழங்கியதாகக் கூறப்படும் நபர் கொழும்பு – வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களால் சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது இரு சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து மயக்க மருந்துகள், கார், ஆட்டோக்கள் மற்றும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்றிருக்கக்கூடிய இதர சம்பவங்கள் குறித்தும் சாட்சியங்களை திரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










