நாட்டை கொள்ளையிலும், ஊழல் முறைகேட்டிலும் இருந்து மீட்க வந்த அரசின் பிரதிநிதிகள் தேசியத்தில் மட்டுமன்றி உள்ளூரிலும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் அஸ்மத் குற்றம் சுமத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியின் பட்டியல் உறுப்பினர் ஒருவர் ஏழைகளுக்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தினை ஏமாற்று மோசடி செய்து தனக்கு பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகவும் அதுதொடர்பில் தான் போதிய ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“செமட்ட நிவஹன” திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் வீடற்றவர்களுக்கான ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வீடமைப்பு அமைச்சினால் வீடு கட்டி கொடுக்கும் அரசின் நிதியினை பெறுவதற்காக, ஏழை மற்றும் பொருத்தமானவர்கள் அக்கரைப்பற்று நகர்பிரிவு – 03 ல் இருந்தும்,
குறித்த தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் அதிகாரத்தினை பயன்படுத்தி, ஏற்கனவே தனது பெயரில் அக்கரைப்பற்று – 11ல் தனக்கு சொந்தமாக ஒரு வீடு காணி இருக்கத்தக்க அதை மாதம் 10,000/- வாடகைக்கு கொடுத்துவிட்டு, தனது கணவரின் பெயரில் இன்னுமொரு காணியை அக்கரைப்பற்று TD – 03 ல் வாங்கி,
“எங்களுக்கு எந்த சொந்த வீடும் இல்லை என்று எழுத்து மூலம் பொய் கூறி, ஏமாற்றி குறித்த காணியில் அரசின் மானிய தொகையூடாக வீடு கட்ட எடுத்த மோசடியான செயற்பாட்டை மேற்கொண்டதன் மூலம், கடந்த DCC கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயரில் குறித்த உறுப்பினரின் கணவரின் பெயரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்து தகவல் அறியும் சட்டம் மூலம் பிரதேச செயலகம் ஊடாக தகவல்களை பெற்றதும், குறித்த நிதியை எப்படியாவது பெறவேண்டும் என்பதற்காக 31/12/2025 அன்று தனது பெயரில் ஏற்கனவே இருந்த காணி உறுதியை தனது தாயின் பெயருக்கு மாற்றி உண்மையை மறைக்க முயற்சித்து தோற்று போன சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் தன்னிடம் போதியளவு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், ஊழல் மோசடிக்கு எதிரான கட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இது தொடர்பில் தான் ஜனாதிபதிமட்டம் வரைக்கும் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவருடைய பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.








