வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம், ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலின் விளைவாகும் என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் Export Finance Australia நிறுவனத்துடன் நடைபெற்ற மின்னஞ்சல் தொடர்புகள் ஹேக்கர்களால் உடைக்கப்பட்டதால், செலுத்தப்பட வேண்டிய நிதி வஞ்சகமான முறையில் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவிற்கு அனுப்பப்படவிருந்த மற்றொரு கொடுப்பனவிலும் இதேபோன்ற முயற்சி கண்டறியப்பட்டதன் பின்னர் சந்தேகம் எழுந்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுகுறித்து திறைசேரி உடனடியாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு, CID மற்றும் இலங்கை CERT ஆகியவற்றிற்கு தகவல் வழங்கியதுடன், உள்வாரி விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஹேக்கர்களை கைது செய்து இழந்த நிதியை மீட்டெடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆதரவை அவுஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.








