வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (கொஸ்தாப்பர்) ஒருவரை நேற்று புதன்கிழமை (29) மாலையில் கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து
கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த திருடன் திருடிய தங்க ஆபரணங்கள், பணம் என்பவற்றை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இதன்போது திருடனின் வீட்டிற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்து தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்ட கைது செய்யப்பட்ட பொலிஸ் கொஸ்தாப்பர் சென்று நான்தான் இந்த சம்பவத்தை விசாரணை செய்து வருவதாக கூறி திருடனிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து அதனை பொலிஸ் கொஸ்தாப்பர் அவரது நண்பர் ஒருவரிடம் இதைனை வைத்திருக்குமாறு அந்த திருட்டுப் பொருட்களை கொடுத்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசேட நடவடிக்கைக்காக பாசிக்குடா சுற்றுலா மையத்தில் கடமைக்காக கடமையாற்றி வந்த குறித்த பொலிஸ் கொஸ்தாப்பரை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய சம்பவ தினமான நேற்று புதன்கிழமை மாலை கைது செய்ததுடன் நண்பனிடம் கொடுத்து வைத்திருந்த திருட்டு தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.








