கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர்.
இக் குடியேற்றத்திற்கு டேசன் தோட்ட மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் NPP பாராளுமன்ற உறுப்பினர் அதனை பொருட்படுத்தாது தோட்ட காணியை வெளியாருக்கு வழங்குவதற்கான முன்னெடுப்பை செய்துள்ளார்.
அது மட்டுமல்லாது, எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். ஏளனமாகவும் பேசியுள்ளார். இருந்தும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள் எவரும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இருபதுக்கும் அதிகமான குடும்பத்தினர் புசல்லாவ டேசன் தோட்டத்தில் உள்ளனர். அக் குடும்பங்களுக்கு தேவையான காணி ஒதுக்கீடு பற்றியோ வீடமைப்பு பற்றியோ எந்தவொரு முன்னெடுப்பும் இதுவரை செய்யப்படவில்லை.
அவ்வாறான சூழ்நிலையில், அதே டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என, வெளி பகுதிகளில் இருந்து ஒரு சாராரை கொண்டுவந்து, டேசன் தோட்ட பகுதியில் குடியேற்றுவது நியாயமானதா?
இன்றைய இப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் கண்டி மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் தோட்ட காணிகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் தோட்ட காணிகளை பாதுகாப்போம், அதனை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளிப்போம் என்ற இலட்சியத்தோடு ஒன்றிணைத்து முன்னோக்கி செல்வோம்.








