மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் (SLIC) மேற்கொண்ட முதலீடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை அந்த நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முதலீடு தொடர்பிலேயே இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்னர், முதலீட்டுக் குழுவிடம் இருந்து தேவையான முறையான அனுமதிகள் பெறப்பட்டதாக அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனுமதியின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை.
அந்த அடிப்படையில் 10 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அந்த நிறுவனம் நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் (Life) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து மொத்தம் 6 பில்லியன் ரூபாவை மட்டுமே முதலீடு செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தத் தொகை பின்வருமாறு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2 பில்லியன் ரூபா – 2030 ஜூலையில் முதிர்ச்சியடையும் பிணைமுறிகள்
3 பில்லியன் ரூபா – 2034 ஜூனில் முதிர்ச்சியடையும் பிணைமுறிகள்
1 பில்லியன் ரூபா – 2037 ஜூலையில் முதிர்ச்சியடையும் பிணைமுறிகள்
9.75% வட்டி வீதத்தில் முதலீடு செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மறுத்துள்ளது. 9.75% என்பது பிணைமுறிகளுக்கான ‘கூப்பன்’ (Coupon) விகிதமே தவிர, தாம் ஏலத்தில் கோரிய விகிதம் அல்ல என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். உண்மையில், சந்தையில் நிலவும் விகிதங்களை விட இலாபகரமான விகிதத்திலேயே தாம் ஏலப்புள்ளிகளை முன்வைத்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டினால் 500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் கருத்துக்களும் அடிப்படையற்றவை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச கணக்காய்வு தரநிலைகளுக்கு (International Accounting Standards) ஏற்பவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட 5 முதன்மை விற்பனையாளர்கள் (Primary Dealers) ஊடாக மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இச்சம்பவம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.








