2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் உறுதிப்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மேன்முறையீட்டு விசாரணையின் முடிவில் போதிய சான்றாதாரங்கள் இல்லாத காரணத்தால் மேலும் இரண்டு குற்றவாளிகளின் தண்டனையை இரத்துச் செய்து அவர்களை விடுவிக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தருணத்தில், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் ‘Zoom’ தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, விசாரணைக் காலப்பகுதியில் ஒரு குற்றவாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் நீதிமன்றப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த வித்யா கொலை வழக்கின் மேன்முறையீட்டு நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.








