கொழும்பு செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் 152ஆவது வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று (28) மாலை அலரி மாளிகை முன்பாக வந்தடைந்தது.
இதனை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தின் சார்பில் விசேட பூஜை மற்றும் சமய மரியாதைகள் இடம்பெற்றதுடன், பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளதாளங்கள் முழங்க வேல் இரதம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட பிரதமர், முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்கு பழத்தட்டு சமர்ப்பித்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர், வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுப் பாராட்டை வழங்கினர்.
கொழும்பு செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆடி வேல் ஊர்வலம், இம்முறை 152ஆவது ஆண்டை எட்டியுள்ளது. 1874ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவமும், கொழும்பின் முக்கியமான இந்து சமய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.















