இலங்கை கடல் எல்லைக்குள் முப்பத்திரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வு பயணத்தை நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆய்வு கப்பல் மீண்டும் இலங்கை வந்தடைந்தது.
இதனை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.
நோர்வே அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆதரவுடன், கடற்றொழில் அமைச்சும் தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்திற்குள் உள்ள மீன் வளங்களை மதிப்பீடு செய்தல், கடல்சார் சூழல் அமைப்புகளை கண்காணித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஆய்வு செய்தல் ஆகியவை இந்த ஆய்வின் பிரதான நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








