வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா இன்று (08) யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு, நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
“கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்” என்ற பழமொழிக்கிணங்க, வடக்கு மக்களின் கல்வித் தேடலுக்கு வலுசேர்க்கும் நோக்கில் இந்த கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் திறமையான மாணவர்கள் பலர் இருந்தபோதிலும், அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்கல்வியை தொடர இது சிறந்த வாய்ப்பாக அமையும் என நிறுவனத்தின் பணிப்பாளர் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஜெறோம் செல்வநாயகம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன் மற்றும் “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களான ரிஷ்வான், ரிஸ்மி, செயல்பாட்டு தலைவர் ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன், மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
வடபகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதில் இந்த கல்வி நிறுவனம் முக்கிய பங்காற்றும் என நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.








