மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்ன உப்போடையில் அமைந்துள்ள களப்புப் பாலத்திற்கு அருகிலிருந்து இந்த சடலங்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலங்களை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் மாமாங்கம் மூன்றாம் குறுக்கைச் சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் அரசடி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சொர்ணலிங்கம் குகேஸ் ஆகியோருடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், மேலதிக நீதிமன்ற விசாரணைகளுக்காக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.















