கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடந்துவ பகுதியில் உள்ள விடுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 35 இந்திய பிரஜைகள் மற்றும் 20 நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 25 கணினிகள், 119 கையடக்கத் தொலைபேசிகள், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம், மேலும் கார் மற்றும் ஜீப் வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 28 இந்திய பிரஜைகள் மற்றும் 5 நேபாள பிரஜைகளும் பொலிஸார் மேற்கொண்ட மற்றொரு சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள், உரிய விசா இன்றி தங்கியிருந்தமை, சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








