நாட்டில் தற்போது அமுலில் உள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்க அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தற்போது எந்தவித தட்டுப்பாடும் இல்லையெனவும், தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் தேவையற்ற நுகர்வை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும், அந்நியச் செலாவணி வீணாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த முறை உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரிசைகள் உருவாகுதல் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படும் பீதி கொள்வனவுகளைத் தவிர்ப்பதற்கும் இந்த முறை பயனுள்ளதாக உள்ளதால் இது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றாலும், கியூ.ஆர் முறைமையை முழுமையாக நீக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகள் முறையாகச் சரிபார்க்கப்படாமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விநியோக முறை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விடுவிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கும் கியூ.ஆர் முறை மூலம் விநியோகிக்கப்பட்ட அளவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.








