யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்களின் நிலைமையையோ பதவியையோ பொருட்படுத்தாமல் அவர்களை பிக்கு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ராமஞ்ஞ நிகாயவின் தென்னிலங்கை தலைமை பீட உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்தார். மேலும், சாசன திருத்தங்களுக்காக ஒரு சங்க சாசன கட்டளை அவசியம் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சங்க நீதிமன்றத்துக்கு அரச அதிகாரம் வழங்குவதற்காக மகாநாயக்க தேரர்கள் விரைவாக செயல்பட வேண்டும்.
கடந்த சில நாட்களில் இலங்கை பிக்குச் சமூகத்தில் பல துயரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு முழு பிக்குச் சமூகத்தையும் அவமதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அது தவறானது எனக் குறிப்பிட்ட அவர், ஒருவரோ இருவரோ செய்யும் தவறுகளுக்காக முழு பிக்குச் சமூகமும் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
ஒருவர் இருவர் செய்யும் தவறுகளுக்காக அனைத்து பிக்குகளையும் குற்றம் சாட்டுவது தவறு. செய்ய வேண்டியது, தவறு செய்பவர்களுக்கு எதிராக தர்மத்துக்கேற்ப நடவடிக்கை எடுப்பதே. இந்த விவகாரத்தில் மகாநாயக்க தேரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது மட்டுமே உள்ளது என்றார்.








